“பாஜகவுக்கு நோ-என்ட்ரி – திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி


ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது, அது எனக்கு தெரியாது என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் விமர்சனத்தை வைத்து, திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
டெல்லி நம் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், திணிப்புக்கும், பாஜகவுக்கும் இங்கு அன்றும் இன்றும் நோ என்ட்ரி தான்” என திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறும். திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளையும் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாகும்.
குறிப்பாக பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக துவக்க நாள் ஆகிய மூன்றையும் இணைத்து திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் இன்று திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், உரையாற்றிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், “76 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவை துவக்கி வைத்தார்.
பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு இன்று மாபெரும் எழுச்சி மாநாட்டை நடத்தி இருக்கிறார் செயல்வீரர் செந்தில் பாலாஜி. மேற்கு மண்டல எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார். அதனால்தான் ‘’அவர் வெளியில் இருந்தால் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது’’ என அவரை முடக்கப் பார்த்தார்கள். திமுக வரலாற்றில் இப்படி ஒரு பிரம்மாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்.
2019ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் எதிரிகளை கலங்கடிக்கும் வகையிலான தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயம் தொடர்ந்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். உங்களைப் போன்ற தொண்டர்களை கொண்ட திமுகவை யாராலும் அழிக்க முடியாது. உங்களுக்குத் தலைமை தொண்டனாக நான் இருப்பது வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பேறு.
தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் திமுக மட்டும்தான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது ‘’காவி கொள்கை’’ என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த கொள்கையின் அரசியல் முகம் தான் பாஜக.

இரு தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என உண்மையை பேசியுள்ளார். அந்த ‘’அதிமுக எனும் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய திமுகதான் காரணம்’’ என நம் மீது பாஜக வன்மத்தை கொட்டி வருகிறது. திமுக மிரட்டலுக்கு அஞ்சும் கட்சியா? இந்தியாவில் முதல் மாநில கட்சி திமுக தான். மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. 75 ஆண்டு வரலாறு நமக்கு இருக்கிறது.
அதன்பின் வந்த கட்சிகள் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என்கிறார்கள். சொன்னவர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள், மறைந்துவிட்டார்கள். இந்தியாவிலே இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது, அது எனக்கு தெரியாது என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
முழுதாய் நனைந்தப் பின் முக்காடு எதற்கு என கேட்பார்கள். அதுபோல், நேற்று, டெல்லியில் கார் மாறி மாறி சென்ற எடப்பாடி பழனிசாமியை பார்த்து, காலிலேயே விழுந்தபின் முகத்தை மறைக்கக் கைகுட்டை எதற்கு என்று கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பு இல்லாமல், என்னை ஒருமையில் பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில், அவரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? ஆனால், மக்கள் ஆட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து, செயலாலும், திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுடன் போராடி தலைநிமிர்த்தும் தமிழ்நாட்டை ஒருநாளும் தலை குனியவிடமாட்டோம்.
தமிழ் மண் தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது. அந்த தமிழ் மண்ணை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. டெல்லி நம் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், திணிப்புக்கும், பாஜகவுக்கும் இங்கு அன்றும் இன்றும் என்றும் நோ என்ட்ரி தான்.
பாஜகவை தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து மாநிலமே இருக்கக்கூடாது என்பதை நோக்கி தான் வருவார்கள். அதற்கான முன்னோட்டத்தை ஏற்கனவே காஷ்மீரில் பார்த்துவிட்டார்கள். மொழி போரில் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ. அதுபோல், இப்போது நமது உரிமை போர் நடத்தி இந்தியாவை காக்க வேண்டும்” என பேசினார்.விழாவில் கழக நிர்வாகிகளுக்கு தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திமுக தொண்டர்களை “தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்’’ ‘’தமிழ்நாடு போராடும்’’ ‘’தமிழ்நாடு வெல்லும்” என உறுதிமொழி கூற வைத்து சபதமெடுக்க வைத்தார்.


banner

Related posts

திமுக சமூக நீதியின் துரோகி – பா.ம.க பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

Ambalam News

செங்கோட்டையன் தலைமையில் ”போட்டி அதிமுக”.!? அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.!!?

Ambalam News

பாஜக அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் – எம்.பி. சசிகாந்த் செந்தில்

Ambalam News

Leave a Comment