தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்ய தொடங்கியுள்ளன. தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய ஒரு புறம் கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இன்னொரு புறம் வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் என மும்முரம் காட்டி வருகிறது.
10 முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால், ஊர்ந்து ஊர்ந்து முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமி எல்லாம் அவங்களுக்கு ஒரு ஆளே கிடையாது.. சும்மா ஊதி தள்ளிவிட்டு போயிடுவாங்க.. என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் திமுக எதிர்க்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. பதிலுக்கு பழனிசாமியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக மீது முன் வைத்து வருகிறார்.
இந்த சூழலில் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டோம் என சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால் எடப்பாடி எல்லாம் பாஜகவுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- நாம அவசரமாக வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்.. வீட்டில் கார் இல்லை.. பைக் இல்லை என்றால் ரேபிடோவில் புக் பண்ணுவோம். ஓலோ வர சொல்லி அவசரமாக போக வேண்டிய இடத்துக்கு போய்விடுவோம்.
அதே மாதிரி இப்போது பாஜக அதிமுகவை புக் பண்ணி வைத்துக்கொண்டு அவங்க அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு பீகாரை எடுத்துக்கொள்ளுங்கள்.பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது நிதிஷ் குமார். முதல்வராக நிதிஷ்குமாரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் இப்போ என்ன ஆச்சு.?அவர் முதல்வர் பதவியை விட்டு விலகிவிட்டார். நிதிஷ் குமாரை ஓரங்கட்டிய பாஜக இப்போது அந்த மாநிலத்தையே தன் கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டது. நிதிஷ் குமாரை எம்பி ஆக்கிட்டாங்க.. நிதிஷ் குமார் 10 முறை முதல்வர் ஆனவர். 10 முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால், ஊர்ந்து ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்கிய எடப்பாடி பழனிசாமி எல்லாம் அவங்களுக்கு ஒரு ஆளே கிடையாது. எடப்பாடியை ஊதி தள்ளிவிட்டு போயிடுவாங்க.தேர்தலுக்கு பிறகு பாருங்கள் அதிமுகவை பாஜக மென்னு தின்று துப்பிவிடும்.. அவ்வளவு தான் அவர்கள் நிலைமை.. பாதம் தாங்கி பழனிசாமிக்கு பாஜகவை எதிர்த்து நிற்க தகுதி கிடையாது. இன்னைக்கு இந்தியாவிலேயே பாஜக நேருக்கு நேர் எதிர்த்து கேள்வி கேக்குற ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என்று அவர் பேசினார்.

