2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்ட சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் விவரங்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 23 அன்று கையெழுத்தானது
ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மார்ச் 27 அன்று கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியலை முறைப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதில் மயிலாப்பூர், ராமநாதபுரம், கோவை வடக்கு, நாகர்கோவில் மற்றும் சாத்தூர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டன.
இருப்பினும், பா.ஜ.க தரப்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளார். கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ”தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யும்” என்று குறிப்பிட்டார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பான இறுதி முடிவை கட்சியின் தலைமை எடுக்கும் என்று விளக்கமளித்தார்.

