ஆணவபடுகொலைகளும் சாதிவெறித் தாக்குதல்களும் மனிதத்தன்மையை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நிர்பந்த்தை நோக்கி நம்மை தள்ளுகிறது. சாதிவெறித் தாக்குதல்களை எந்த சமரசமும் இன்றி இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய கடமை ஆளும் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. மெத்தனமான நடவடிக்கைகள் இதுபோன்ற தாக்குதல்களை ஊக்கப்படுத்திவிடும் என்னபதை ஆட்சியாளர்கள் உணரத்தவறியதன் விளவுகள் இதுபோன்ற சம்பவங்கள் நீட்சியாக இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம், காவலப்பட்டி ஊராட்சி, வேலாயுதம்பாளையம் புதூர் கிராமத்தில் நடந்த சாதிவெறி தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம், காவலப்பட்டி ஊராட்சி, வேலாயுதம்பாளையம் புதூர் கிராமத்தில் 17.06.2026 அன்று தலித் அருந்ததியர் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் புகுந்த 30-க்கும் மேற்பட்ட சாதிவெறிக் கும்பல், கொடூரமான ஆயுதங்களுடன் வீடுகளை தாக்கி அச்சுறுத்தியது. இத்தாக்குதலில் வி.ஆறுமுகம் கடுமையாக தாக்கப்பட்டதுடன், தடுக்க முயன்ற லட்சுமி, டி.ஆறுமுகம், ஜெயஸ்ரீ, பார்வதியம்மாள் உள்ளிட்ட பலரும் பலத்த காயமடைந்தனர்.
இந்தக் கொடூரமான சாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுதவி உடனடியாக வழங்க வேண்டும், வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மயானத்திற்கு பாதை இல்லாமல் 2 கிலோமீட்டர் வயல்வெளிகளில் உடலை எடுத்துச் செல்லும் அவலத்திற்கு எதிராகவும், அப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டும் இன்று திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு #TNUEF & #CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் #TNUEF மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜி.ராணி, மாவட்ட செயலாளர் கே.டி.கலைச்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, மாவட்ட பொருளாளர் கே.அருள்செல்வன் மற்றும் எம்.ஆர்.முத்துச்சாமி, சோ.மோகனா, #CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாதர் சங்க ஜி.கௌரி, வாலிபர் சங்க கே.ரமேஷ், தட்டான் குளம் எஸ்.பி.சேகர், தமிழர் சமூக நீதிக் கட்சி நிறுவனர் சுரா.தங்கப்பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி மாநில துணைச் செயலாளர் மருதை போஸ், ஆதித் தமிழர் பேரவை தலித்.சுப்பிரமணி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழக அரசு இது போன்ற சாதீய பாகுபாடுகள் மற்றும் தாக்குதல்கள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற குற்றங்களை தடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

