தவெக வேட்பாளர்கள் தேர்வில் சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையில், தகுதியானவர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை வசதியானவர்களுக்கு மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புகார் பட்டியல் ஒருபுறம் வாசிக்கப்படும் சூழலில், கஞ்சா வழக்கில் சிக்கி, சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வந்த நபருக்கு பேராவூரணி தொகுதிக்கு சீட் ஒதுக்கிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்கு 600 கோடி இழப்பை ஏற்படுத்திய புகாரில் கைதான ஜைனைத் அகமது என்ற நபருக்கும் சையது புர்ஹானுதீன் என்பவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சையது புர்ஹானுதீனுக்கு தான் வாணியம்பாடி தொகுதியை தவெக விஜய் ஒதுக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் மீண்டும் சர்ச்சை தொடங்கியுள்ளது.
ரூ.600 கோடி மோசடி புகாரில், வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை ஆஜராகாததால் 5-வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 140-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் கைதான ஜைனைத் அகமதுவின் செல்போன்களை ஆய்வு செய்ததில், மோசடியில் சையது புர்ஹானுதீனுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சையது புர்ஹானுதீனுக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

