தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது. காலை முதலே வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு, வேட்பு மனு ஏற்பு என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு முன்மொழிந்த நபர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி அருண்குமார் சென்ற வேட்பாளர் அருண் குமார் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளருக்கு மாற்றாக நிறுத்தப்பட்டு இருந்தவரின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்பதால் அவர் மாயமாகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். முன்னதாக தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமாகிவிட்டதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தவெக நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் மனுவும், மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக – திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 8-வது முறையாக போட்டியிட உள்ளார். தமிழகத்தின் மிக முக்கியமான நட்ச்சத்திர தொகுதிகளில் ஒன்றாக எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதோடு, வேட்பாளரும் மாயமாகி இருப்பது, அந்த தொகுதியில் மட்டுமின்றி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

