டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கிறார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அடுத்தடுத்து அறிவித்தனர்.
இவை ஒருபுறமிருக்க முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனும் கட்சிக்குள் போர்க்கொடி தூக்கி, செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார்.
ஆனால் தனது முடிவில் உறுதியாக உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு கெடு விதித்த செங்கோட்டையனை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்.
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு முடிந்த அடுத்த நாளே, டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி அமித்ஷாவிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக கூறபட்டது.
இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சேலம் திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி பயணம் குறித்து இன்று காலை 10 மணிக்கு பதிலளிப்பதாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, செங்கோட்டையனும் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது, எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு செங்கோட்டையன் பதிலளிக்கும் விதமாக பேசுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts
Click to comment