தமிழ்நாடு சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து தங்களது உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 7ம் தேதி செல்ல வேண்டிய தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை.. முக்கியமாக காலை உணவு திட்டம் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருக்க கூடாது.
தவெ.க ஆட்சியை தொடர தி.மு.க தடையாக இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் விஜய். ஒரு தொகுதியில் நிற்க தைரியம் இன்றி இரண்டு தொகுதியில் நின்றுள்ளார்.
நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு எண்ணிக்கை குறைந்து நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படுங்கள். அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட், அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. உங்களுக்கு CHANGE வரும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் CHANGE-க்கு பின் மிகப்பெரிய EXCHANGE இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.. ஏற்கெனவே திமுக தலைவர் சொன்னதுபோல உங்கள் ஆட்சி தொடர நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசி உள்ளார்.
இந்நிலையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்களின் ஆதரவோடு தவெக வெற்றிபெற்றது.

