”நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்” – தவெக விஜய்..


1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த செப். 20ஆம் தேதி மேற்கொண்டார். அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து, அவர் உரையாற்றினார்.
விஜய்யின் பரப்புரையின் போது, நாகையில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக கூறி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, திருவாரூரிலும் தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர் பரப்புரையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவியதற்காக அந்தந்த மாவட்ட தவெகவினருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ள விஜய் திமுகவை மறைமுகமாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்…
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!
புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.


banner

Related posts

உத்தரகாசியில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம், மண்சரிவு, ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்

Ambalam News

திருவள்ளூரில் மீண்டும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை… கடத்திச் சென்ற அசாம் இளைஞர் சிக்கினார்..

Ambalam News

திருவண்ணாமலை கோவில் கோபுரம் முன்பு காம்ப்ளக்ஸ் கட்டும் வழக்கில் நீதிபதிகள் அறநிலையத்துறைக்கு கண்டனம் – சரமாரி கேள்வி..

Ambalam News

Leave a Comment