பாமக செயல் தலைவராகிறாரா.? இராமதாஸ் மகள் காந்திமதி.. இராமதாஸ் அன்புமணி மோதல் அடுத்தது என்ன.?



இராமதாசுக்கு அடுத்ததாக, பாமகவின் நம்பிக்கை நட்சத்திரமாக, வன்னியர் குல மக்களின் பாதுகாவலராக கொண்டாடப்பட்டவர் அன்புமணி. பாமகவில் வெடித்த குடும்ப அரசியலால் அவரது தந்தையாலேயே பாமகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பாமக தொண்டர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. இராமதாசின் இருக்கையில் ஒட்டுக்கேட்பு கருவியை மறைத்து வைத்தது, அனுமதியின்றி பொதுக்குழுவை கூடியது என்று பல குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது வீசி அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால் அன்புமணி தரப்பு இந்த நடவடிக்கைகள் பாமவாவை கட்டுப்படுத்தாது என்று அறிவித்துள்ளனர். இந்த மோதல் போக்கால் பரபரப்பு நிலவி வருகிறது.
குடும்ப அரசியல் – இராமதாஸ் அன்புமணி மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஆண்டு இறுதியில், புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை கட்சியின் மாநில பொறுப்பிற்கு கொண்டுவரும் விதமாக ”முகுந்தன் மாநில இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்று, அன்புமணி ராமதாஸுக்கு உதவியாக இருப்பார்” என்றார். அவரது பேச்சை இடைமறித்த அன்புமணி, முகுந்தன் தொடர்பான நியமனத்திற்கு தனது விரக்தியை வெளிப்படுத்தினார். அப்போது இராமதாஸ் அன்புமணி இருவருக்குமிடையே பொதுக்குழுக் கூட்ட மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு ராமதாஸ், “யாரா இருந்தாலும் நான் சொல்றத தான் கேட்கணும். நான் சொல்றத கேட்கவில்லை எனில், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உண்டாக்கிய கட்சி” என்றார்.
அன்புமணியின் பேச்சை பொருட்படுத்தாது, இராமதாஸ் மாநில இளைஞர் சங்கத் தலைவராக, முகுந்தன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதைக் கேட்ட அன்புமணி, மைக்கை மேஜை மீது தூக்கிப் போட்டார். அதை தொடர்ந்து ”சென்னை பனையூரில் அலுவலகம் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். அங்கே வந்து என்னைப் பார்க்கலாம்” என்று கூறியவர் போன் நம்பர் ஒன்றையும் தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பிறகு, பாமக இரண்டு அணிகளாகச் செயல்பட்டது. பாமகவை ஒன்றிணைக்கும் பணியில் பலரும் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே இருவரும் தனித்தனியாக கட்சிப் பொறுப்பாளர்களர்களை நியமித்தனர். தவிர, கூட்டங்களையும் நடத்தினர். இதன் விளைவாக இறுதிவரை முட்டல் மோதலுடன் தொடங்கிய அவர்களது பனிப்போர், இன்று அன்புமணியின் நீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
இராமதாஸ் அன்புமணி மோதலால் பதவியிலிருந்து விலகிய முகுந்தன்
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன்தான் முகுந்தன். இந்த முகுந்தனின் சகோதரர் ப்ரீத்தீவனுக்குத்தான் தனது மூத்த மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார் அன்புமணி. பொறியாளரான முகுந்தன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த ஆண்டு இடையில் பாமகவில் இணைந்த அவர், கட்சியின் சமூக ஊடகப் பேரவை மாநிலச் செயலாளர் பொறுப்பு வகித்தார். தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை கட்சியின் இளைஞரணித் தலைவராக்க ராமதாஸ் முடிவு செய்தார். ஆனால், சகோதரியின் மகனான முகுந்தனுக்கு, தான் வகித்த இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கு அன்புமணி போர்க்கொடி தூக்கினார். அதேநேரத்தில், பாமகவில் தாத்தா ராமதாஸ் – மாமா அன்புமணிக்கும் இடையே தன்னால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, முகுந்தன் தன் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். முகுந்தன் விலகிய நிலையிலும் இராமதாஸ் – அன்புமணி மோதல் தொடர்ந்து வந்தது.
அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய இராமதாஸ்
இராமதாஸ் அன்புமணி இடையேயான மோதல் தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் உச்சத்தை எட்டியது.
இந்த மோதல்களை தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டதாக, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக பாமகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மைக்கை தூக்கிப் போட்டு ராமதாஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்து தொண்டர்களை வர அழைப்புவிடுத்தது, 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது, ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது, அனுமதி பெறாமல் பொதுக்குழு நடத்தியது, சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது என்று அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ அன்புமணி பதில் அளிக்கலாம் என ராமதாஸ் தரப்பு முதல் கெடு விதித்தது. ஆனால் அன்புமணி பதில் அளிக்காததால், மீண்டும் 2வது முறையாக வாய்ப்பு வழங்கியது. அதற்கும் அன்புமணி பதிலளிக்காததால், ராமதாஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது. உரிய விளக்கம் அளிக்காததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகிவிட்டன. அன்புமணியின் செயல்கள் தலைமைக்கு கட்டுப்படாத வகையில் உள்ளது. பாமகவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசியல் தலைவராகச் செயல்பட அன்புமணி தகுதியற்றவர். மூத்தவர்கள் கூறிய அறிவுரைகளை அன்புமணி கேட்கவில்லை. பாமக உறுப்பினர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்கத் தயார். தேவைப்பட்டால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அவர், தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது” எனத் தெரிவித்துள்ளார்.
இராமதாசின் நடவடிக்கை கட்சி விதிகளுக்கு எதிரானது, பாமகவை இராமதாசின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது – அன்புமணி தரப்பு
அதேநேரத்தில் அன்புமணியின் நீக்கத்திற்குப் பதிலளித்த வழக்கறிஞர் பாலு, ”பாமகவில் நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது என எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினுடைய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே, ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பு கட்சிக்கு விதிகளுக்கு எதிரானது. பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் ராமதாஸின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது. கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்ந்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
காந்திமதியைக் களமிறக்கிய ராமதாஸ்..! பாமக செயல் தலைவராகிறாரா.? இராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி.!?


கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்ட இராமதாஸ் நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். தன் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் முன்னிறுத்தி வருகிறார். கடந்த ஜூலை 8 ஆம் தேதி, திண்டிவனத்தில் நடந்த பா.ம.க., செயற்குழுவில், ஸ்ரீகாந்திமதி மேடையேறினார். கடந்த 10-ம் தேதி பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டிலும் ஸ்ரீகாந்திமதி பேசினார். தற்போது அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், ஸ்ரீகாந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நேரத்தில் முடிவுக்கு வராமல் தொடரும் இராமதாஸ் அன்புமணி மோதல் பாமக தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


banner

Related posts

ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார்

Ambalam News

தவெக பிரச்சாரத்தில் 31 பேர் பலி.. கரூரில் பதற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் செல்கிறார்

Ambalam News

”நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்” – தவெக விஜய்..

Ambalam News

Leave a Comment