இபிஎஸ் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு, அதிமுகவை ஒன்றிணைக்க தொண்டர்கள் கோஷம்..



தேனியில் ‘’மக்களைக் காப்போம்’’ ‘’தமிழகத்தை மீட்போம்’’ பிரச்சாரப் பயணத்திற்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை மக்கள் மறித்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தநிலையில் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் உச்சமடைந்திருக்கிறது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், இரு கட்சிகளிலும் கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக, டிடிவி தினகரனின் அமமுக, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரின் நிலைபாடு என்ன என்ற கேள்வி எழுந்துவந்தது.
இந்நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இருவரும் அடுத்தடுத்து என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சில தினங்களுக்கு முன்பு, செங்கோட்டையன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, 5ஆம் தேதியான இன்று மனம் திறந்து பேசுவதாக அறிவித்தார். அதன்படி இன்று ஊடகங்களை அழைத்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மற்ற வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அடுத்த 10 நாளில் துவங்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தென்மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில், மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில், அவர் செங்கோட்டையன் கருத்து குறித்து பதிலளித்து பேசுவார் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தேனியில் இன்று அவர் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதிமுக கொடிகளுடன் திடீரென அவரது வாகனத்தின் குறுக்கே வந்து மறித்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் “வேண்டும் வேண்டும் ஒருங்கிணைய வேண்டும்; நிற்போம் நிற்போம் ஓரணியில் நிற்போம்” என கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவுக்குள் உட்கட்சி மோதல் உச்சமடைந்திருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தி இருக்கிறது.


banner

Related posts

“ஊர் ஒன்று கூடினால்தான் தேரை இழுக்க முடியும்” – காலம் பதில் சொல்லும்.. ஆர்.பி.உதயகுமாருக்கு செங்கோட்டையன் பதிலடி..

Ambalam News

பொன்முடியின் ஆபாச பேச்சு.. அமைச்சர் பதவியை பறிக்க தீவிரம் காட்டும் முதல்வர்..

Admin

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

Leave a Comment