அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் நடந்ததாக கூறி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஆதாரங்களை சேகரித்தால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கின் புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ம் தேதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts
Click to comment