திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கோவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். காயமடைதவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

கடந்த 2022ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் முடிந்து, ஜூலை மாதம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின். கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறாத நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு மீது கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. உரிய நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இந்த விபத்து சமயபுரம் மாரியம்மன் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. .

