
கரூரில் 41 பேர் இறந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றிருக்கிறார். இந்தநிலையில், டெல்லியில் வைத்து பாஜக விஜயுடன் கூட்டணி பேரம் நடத்தும் என்று ஊடகங்களும் அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெகவை பாஜக தங்கள் கூட்டணிக்குள் இழுத்துவிடும் என்றே நம்பப்படுகிறது. அதிமுக தரப்பிலும் விஜய்யின் வருக்காயை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், மனம் திறந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேசமயத்தில் அதிமுகவுடன் அண்ணாமலை வருதத்தில் இருப்பதாக கூறப்பட்டது வந்தது அதுகுறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்
தனியார் யூடியூப் சேனலின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசுகையில், விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை; தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய ஆட்சியாளர்கள் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஊடகங்களுக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டன. முதல்வர் தினமும் போட்டோஷூட் நடத்துகிறார். அதைத்தான் இன்றைய தினம் பத்திரிகை, ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஒரு திட்டத்தை அறிவித்து பெயர் சூட்டுவதோடு சரி, அந்த திட்டத்தை செயல்படுத்தவே மாட்டார். 52 குழுக்கள் போட்ட ஒரே அரசு ஸ்டாலின் தலைமையிலான அரசுதான். இந்த குழுக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கேட்டிருந்தேன். எந்த பதிலும் வரவில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா? திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு 525 அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்புகளைக் கூட நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். அதையும் செய்யவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்ற அந்த ரகசியத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டு உடைத்துவிட்டார். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதனால் 3000 மாணவர்கள் மருத்துவ படிப்பு பயின்று வருகிறார்கள்.
எனக்கும் அண்ணாமலைக்கும் ஒரு பிரச்சனையும் கிடையாது. ஊடகங்கள்தான் பிரச்சனையே. அண்ணாமலை வரும் 17ஆம் தேதி கோவை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். வேலுமணி முன்னிலை வகிக்கிறார். எனவே எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை, பத்திரிகைகள்தான் அப்படி எழுதுதிகிறார்கள்.
நானும் தினகரனும் நிச்சயமாக ஒரு தாய் மக்களாக ஆகிவிட்டோம். இதில் என்ன இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் எல்லாம் களையப்பட்டுவிட்டன. ஒன்றாக இணைந்துவிட்டோம். வரும் தேர்தலில் வெல்ல அவரும் உழைப்பார், நாங்களும் உழைப்போம். திமுகவில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். எங்க கட்சிகள் வலிமை வாய்ந்தன. திமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. எத்தனை கட்சி இருக்கும், வெளியேறும் என தெரியவில்லை.
அதிமுகவை பொருத்தமட்டில் மக்களிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பொன் விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி, தேஜகூ வலிமையான கூட்டணி. தினகரன், அன்புமணி கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு பெற்றவை. எங்கள் வாக்கு வங்கி நிலையானது. அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
விஜய்யின் தவெக, என்டிஏ கூட்டணியில் வருமா.? வராதா.? என கேட்கிறார்கள். நான் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டேன். இதுவரை பேசவில்லை, ஊடகங்கள்தான் பெரிதுப்படுத்துகின்றன. தவெகவுடன் அதிமுக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை, பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிமுக – த.வெ.க கூட்டணி அமையப் போவதாகப் பலமான வதந்திகள் பரவி வந்த நிலையில், ஈபிஎஸ்-ஸின் இந்த விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார். ஆனால் பாஜகவி முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற தவெக தலைவர் திரும்பிய பின்னர் தான் பாஜக அதிமுக கூட்டணியில் விஜய் இணைகிறாரா.? இல்லையா.? என்பது தெரியவரும் என்கின்றனர் விபரமாறிந்தவர்கள்.

