சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேயர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டம், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் தூய்மை பணியாளர்களை நேற்றிரவு கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 5, 6 வது மண்டலங்களில் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணிநிரந்தரம், பனிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் திரை பிரபலங்கள், மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, போராட்டம் நடத்திவரும் தூய்மை பணியாளர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியதோடு, தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, வரும் 31 ஆம் தேதிக்குள் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டுமெனக் கூறினார்.
இருப்பினும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்றிரவு ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீசார் தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் காவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தூய்மைப்பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி சென்றனர். தூய்மை பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
Related posts
Click to comment