2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி சாத்தான் குளத்தில் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கடையை திறந்து வைத்திருந்த நிலையில், அங்கு ரோந்து வந்த போலீசார் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்கள்.
இதையடுத்து ஜெயராஜின் மகன் பெனிக்ஸ் அன்று இரவே காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு அவரது தந்தை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கிடந்ததை கண்டு நியாயம் கேட்டிருக்கிறார் அப்போது அவரையும் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்துவதாக கூறி கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மறுநாள் ஜூன் 20 ஆம் தேதி அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெனிக்ஸ் 22 ஆம் தேதி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறு நாள் 23 ஆம் தேதி அதிகாலை ஜெயராஜூம் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி “தந்தை, மகன் இருவரும் உடல்நலமின்றி இறந்துவிட்டனர்!” என்று ஊடகங்கள் முன்னிலையில் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியதையும் மறந்துவிடமுடியாது.
இதே எடப்பாடி பழனிச்சாமிதான் விளாத்திகுளம் மாணவி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட வாகழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையையும் திமுக அரசையும் விமர்சிக்கிறார் என்று திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர்.
குற்றங்கள் எப்போதும் தொடர்கதைதான், தவறான மனிதர்களும் , தவறான அதிகாரிகளும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.
குற்றம் நிகழ்ந்த பிறகு அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது, எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதுதான் ஒரு அரசின் திராணி என்ன என்பதை வெளிப்படுத்தும் என்பதை நாம் அனுபவத்தில் கண்டு வருகிறோம்.

