தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் , பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேண்ட் அணிந்து சட்டப்பேரவைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளங்கள் வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா மற்றும் தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி மொழிக்கு தடை விதிக்கும் இந்த மசோதா குறித்த தகவல்கள் வெளியான நிலையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்ற நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இரண்டு திருத்த சட்டம் முன் வடிவுகள் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை 9:30 மணிக்கு கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அதைத்தொடர்ந்து பேரவையில் சட்டம் முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளது.