அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த செங்கோட்டையன் கடந்த வாரம் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறினார். மேலும் இவர்களது செயல்பாடுகள் அரசியலிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி. எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.இராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், இன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவுடனான இந்த சந்திப்பானது, உட்கட்சி பூசலால் தவித்து வரும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பரபரப்பை பற்றவைத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதிமுகவின் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் சந்திப்பாகவும் பார்க்கப்படுகிறது.
Related posts
Click to comment