தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில்,கடந்த 10ஆம் தேதி வி.கே.சசிகலா தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை வி.கே. சசிகலா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாமக கௌரவ தலைவர் ஜிகே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ஆகியோர் இருந்தனர்.

இந்தச் சந்திப்பில் இருவரும் இணைந்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான கூட்டறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூட்டணி அமைக்கிறது. தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதுவரை தமிழ்நாட்டில் திமுக – அதிமுக தலைமையிலான இரு கூட்டணிகளும், தவெக மற்றும் நாதக ஆகியவை தனித்தும் களத்தில் நிற்கின்றன.. இதன் காரணமாக தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அ.இ.பு.த.ம.மு.க நிறுவனர் சசிகலா ஆகியோர் புதிய கூட்டணி அமைத்திருப்பதைத் தொடர்ந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் களம் ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது.

