தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிர்வாக ரீதியிலான பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அரசு உயர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு அரசின் நலத்திட்டங்களை விரைந்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும், 38-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மட்டத்தில் இந்த மாற்றங்கள் அதிக கவனத்தை பெற்றது.
கோயம்புத்தூர், தேனி போன்ற முக்கிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் முக்கிய பொறுப்பில் உள்ள பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் புதிதாகக் களம் இறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் திமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் அரசியல் நகர்வுகளைச் சமாளிக்கும் வகையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்கட்சிகளுடன் நெருக்கமாக இருக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல,தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கைத் பலப்படுத்தும் நோக்கிலேயே காவல்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் பெரிய அளவில் பதவி உயர்வு மற்றும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இளம் அதிகாரிகளுக்கு முக்கியத் துறைகளை வழங்கி, தேர்தலுக்கு முன் எவ்விதத் தொய்வும் இல்லாமல் நிர்வாகத்தை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
முதல்வரின் நடவடிக்கையால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கசியும் சீக்ரெட் தகவல்கள் தடுக்கப்படுவதோடு, எதிர்கட்சிகளுக்காக வேலை செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.
– ஏ. கே

