தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கூட்டணி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி சர்ச்சைகள், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளை தீவிரமாக எதிர்த்து தவெக தலைவர் விஜய் அரசியல் செய்ய தொடங்கியுள்ளார். கோவையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளில் வெற்றி கனி பறித்து தலைவர் காலடியில் சமர்பிப்பேன் என்று சபதம் ஏற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக முகாமை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தவெகவின் மாவட்ட பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பேசுகையில், “இந்த மாவட்டத்தில் தற்போதைய ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அந்த அத்தனை அமைச்சர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இந்தக் கூட்டம் இங்கே அமைந்திருப்பதை நான் காண்கிறேன். நாளை என்ன நடக்கப் போகிறது என்று அவர்கள் இப்போதே வியந்து போய் இருக்கிறார்கள். தவெகவில் இணைந்த பிறகு எனக்கு 20 வயது குறைந்திருக்கிறது.
அந்த அளவிற்கு ஒரு இளைஞராகத் துடிப்புடன் ஓடுவதற்கு அவர் என்னை இன்று தயார்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கு நான் முழுமையாகத் தயாராகிவிட்டேன். இங்கே கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை 29 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறித்து வந்து நம் தலைவரின் காலடியிலே சமர்ப்பிப்பதுதான் என்னுடைய லட்சியப் பயணமாக இருக்கும். 2026-ல் நம் தலைவர் யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். அதை யாராலும் மாற்றிக்காட்ட முடியாது. இங்கு சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இங்கே இருப்பவர்கள் அதிமுகவிலோ அல்லது திமுகவிலோ ஒரு காலை வைத்துக்கொண்டு இங்கே இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள். சட்ட ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. வீதிகளில் குப்பைகள் மலைபோலக் குவிகின்றன. மரப்பாலத்திலே கட்டப்படுகிற ரயில்வே மேம்பாலங்கள் இன்னும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிற்கின்றன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது இதையேதான் சொன்னார்கள். நடிகர் நாடாள முடியுமா? என்று கேட்டார்கள். நடிகர் நாடாள மட்டுமல்ல, நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற வரலாற்றை படைக்கக்கூடிய தலைவராக நம் தளபதி வருவார். அதை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தைப் பாருங்கள்! ஒரு ரூபாய் கூடப் பணம் கொடுக்காமல், இவ்வளவு பேர் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கிறீர்கள் என்றால், உங்களை வெல்வதற்கு இந்த உலகத்தில் எந்தச் சக்தியாலும் முடியாது.
இதே அளவு கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால், ஆளுங்கட்சி அமைச்சர்கள் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். திமுக மகளிர் மாநாடுக்காக 110 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் பணம், ஒரு சேலை, பேருந்து வசதி என அனைத்தையும் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தார்கள். அங்கே கூட்டத்தைப் பார்த்தோமே தவிர, எள்ளளவும் எழுச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், இங்கே பண பலம் இல்லாமல் திரண்டிருக்கும் உங்கள் முகங்களில் அந்த எழுச்சியைக் காண்கிறேன். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால் உங்களை மிஞ்சுவதற்கு எந்த சக்தியாலும் உலகத்திலே இனி முடியாது என்ற வரலாற்றை படைக்கிற கூட்டம் தான் இங்கே இருக்கிறது.
இந்த கூட்டத்தை பொறுத்தவரை நான் சொல்கிறேன் நாளை தமிழகம் மாறப்போகிறது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்த சக்தியாலும் தமிழகத்தில் நிறுத்த முடியாது. எல்லோரும் கனவு காணுகிறார்கள். ஆட்சி மாற்றங்கள் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 2026 தேர்தலில் நம் தளபதிக்கு வாக்களிக்கப் போகிறோம். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தமிழகம் வந்து வாக்களிப்போம் என்றனர். இது வேறு எங்கும் சாத்தியமில்லை” என்றார்.

