திருவண்ணாமலை கோவில் கோபுரம் முன்பு காம்ப்ளக்ஸ் கட்டும் வழக்கில் நீதிபதிகள் அறநிலையத்துறைக்கு கண்டனம் – சரமாரி கேள்வி..


திருவண்ணாமலை கோவில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வணிக வளாகம் கட்டுவதற்கு பதிலாக பக்தர்கள் வசதிக்காக கியூ காம்ப்ளக்ஸ் கட்ட உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், கியூ காம்ப்ளக்ஸ் குறித்த தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நான்காம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்டப்பட்டு வருவதாக கூறி, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றைப் பார்வையிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் அறநிலைத்துறையின் செயல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தனர். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காம் பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்டப்படுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன.? எனவும் இந்த கட்டுமானங்கள் சுற்றுச்சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா.? எனவும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை விளக்கும் வகையில், ஆவண ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை நான்காம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமல்லாமல், கோவிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அக்டோபர் 5 ம் தேதி கோவிலில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.


banner

Related posts

இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்

Ambalam News

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு | கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Ambalam News

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

Leave a Comment