திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் விவசாய வேலையுடன், கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும் பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா (36). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகனும், விவசாயியுமான பாலு என்பவருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.
தொழில்ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியது. இதையடுத்து பாலு அவ்வப்போது குமாரின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது குமாரின் மனைவி விஜயாவுடன் அவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி குமாருக்கு அரசல் புரசலாக தெரியவந்துள்ளது.
விவசாயத்தில், குமாருக்கு ரூ.15 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமை காரணமாக அவ்வப்போது குமார், விஜயாவை அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து, கடனை என்னால் அடைக்க முடியாது, நீயே அடைத்துக்கொள் என்று கூறி தகராறு செய்து உள்ளார். இதையடுத்து குமாரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று விஜயா முடிவு செய்துள்ளார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் விஜயா தினமும் 2 தூக்க மாத்திரைகள் வாங்கி சேர்த்து வைத்துள்ளார்.
குமாருக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்படும்போது, முருங்கை இலை ‘சூப்’ குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. முருங்கக்கீரை சூப் கேட்ட நிலையில், விஜயா தான் சேர்த்து வைத்திருந்த அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை முருங்கக்கீரை சுப்பில் போட்டு கணவனுக்கு கொடுத்துள்ளார்.
சூப்பை குடித்த குமார் சற்று நேரத்தில் மயக்கமடைந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து குமார் இறந்து விட்டாரா? என விஜயா சோதித்து பார்த்துள்ளார். ஆனால் குமார் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த பாலுவை அழைத்து வந்து, குமார் இன்னும் சாகவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலு, குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல கள்ளக்காதலர்கள் இருவரும் அங்கிருந்து பூப்பறிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த விஜயா, குமார் பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி, அலறி துடித்து நடித்துள்ளார். இதையடுத்து வந்த உறவினர்களிடம் வயிறு வலிப்பதாக கூறிய குமார், உயிரிழந்து கிடந்ததாக நாடகம் ஆடியுள்ளார். உறவினர்களும் குமாரின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், இறப்பில் சந்தேகமடைந்த உறவினர் ஒருவர் காவல் காட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கள்ளக்காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts
Click to comment