குடும்பப் பிரச்னை..
7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை..
சென்னை அயனாவரம் பகுதி ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பதோடு, பழைய ஸ்பீக்கர்களை சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். சொந்தமாக ஒரு ஸ்பீக்கர் கடையையும் நடத்தி வருகிறார். சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் சதீஷூடைய மகள் ஸ்டெபி கடந்த ஓராண்டாக சதீஷ் உடன் வசித்து வந்த நிலையில், தற்போது குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது மனைவி தொடர்ந்து பிரச்னை செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு சதீஷ்குமார் தன் ஏழு வயது மகளை அழைத்துக் கொண்டு ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் சதீஷ் தன் அக்கா கெசியா என்பவருக்கு போன் செய்து, தான் ஆலந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், தனது மகளைக் கொலை செய்து விட்டேன் என்றும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி கெசியா, உடனே ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு ஓட்டலுக்கு விரைந்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டல் அலுவலர் மற்றும் கெசியா இருவரும் சதீஷ் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்த போது, சதீஷ் தன் மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே உயிருக்கு போராடிய சதீஷ்சை மீட்டு சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நடந்த சம்பவம் குறித்து சதீஷ் சகோதரி கெசியா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பரங்கிமலை காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.