திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மகேஷ்வரனை தொடர்பு கொண்டு பேசிய சிறுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது சக்காரியா நேரடியாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் வந்து தன்னை சந்திக்கும்படி கூறியுள்ளார். அதன் பின்பு கிராம நிர்வாக அலுவலரை மகேஸ்வரன் சந்தித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் முகமது சக்காரியா , பட்டா மாறுதல் செய்வதற்கு 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டு அலைய விட்டிருக்கிறார்.
லஞ்சம் தர விரும்பாத விவசாயி மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரசாயன பவுடர் தடவிய 2500 ரூபாய் நோட்டுக்களை விவசாயி மகேஸ்வரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சிறுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது சக்காரியாவை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கிராம நிர்வாக அலுவலர் முகமது சக்காரியா மீது (கு.எண்.3/2025) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.