
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்தித்த தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், கொள்ளைப்புற வாசல் வழியாக பாஜக உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்ற நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவை ஆதரித்தனர். அவர்களின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கான, பதவியேற்பு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது, முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைத் தொடர்ந்து சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றனர்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்பிய முதல்வர் விஜய் நேராக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். முதல்வர் விஜய்யை வாசலுக்கு வந்து வரவேற்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த முதல்வர் விஜய்க்கு மு.க ஸ்டாலின் சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு ”காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு ” என்ற புத்தகத்தை பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

