தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இணைந்தது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி திமுக தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவையை ஒதுக்கியது. தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மாநிலங்களவை உறுப்பினருக்கு மனு தாக்கல் செய்து, எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வந்தது. சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தையும் முடித்து கையெழுத்திட்டது.

கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்க்கு 28, இ.கம்யூனிஸ்ட்க்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு 5, மதிமுகவுக்கு 4, மமகவுக்கு 2, இ.யூ.மு.லீக் கட்சிக்கு 2, கொமதேகட்சிக்கு 2 என்ற வகையில் தொகுதிகளை திமுக ஒதுக்கியது.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தேமுதிகவுடனான கூட்டணி ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிட விருப்பமுள்ள 27 தொகுதிகள் பட்டியலை தேமுதிக திமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

