2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கவர்ச்சிகரமான 297 அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த தேர்தல் அறிக்கையில், பொது மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் அதிமுக சார்பில் ஏற்கனவே 3 கட்டமாக வாக்குறுதிகளை அறிவித்து இருந்த நிலையில் இன்று மொத்தமாக 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச ப்ரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) முதியோர் உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியுடன் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம், வீடற்ற குடும்பங்களுக்கு அம்மா இலவச வீடு திட்டத்தின் கீழ் இலவச கான்கிரீட் வீடு, மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், காட்சி ஊடகவியளாலர்களுக்கு ஓய்வூதியம், இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும், கொத்தடிமை இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும், ஜெயலலிதாவின் கனவு திட்டமான கச்சத் தீவை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கை, மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகை தொடர நடவடிக்கை போன்ற அறிவிப்புகளை அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக எடப்பாடி பழனிச்சாமி வெளியீட்டுள்ளார்.

