
ஆளுநர் உரையில் 3 ஆண்டுகளாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிப்பாரா? என்பதில் பரபரப்பு நிலவுகிறது. ஆளுநர் உரையில் 3 ஆண்டுகளாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிப்பாரா.? இல்லை இந்த ஆண்டும் சர்ச்சை எழுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதில் உரையாற்றுவதற்காக காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.
காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவடைய உள்ளது.
அதன்பின் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

