புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் விடுமுறை நாட்களில் நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி இரவு, இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள வீடியோ கேம் சென்டரில் நண்பர்கள் ‘வீடியோ கேம்’ விளையாடி கொண்டிருந்துள்ளார். எஸ்.ஐ. ராஜாராமனும் அவருடன் வந்திருந்த ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது வீடியோ கேம் விளையாடி முடித்துவிட்டு மூவரும் வெளியே வந்த பொது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராரை தொடர்ந்து, எஸ்.ஐ.ராஜாராமன் மீது உடன் வந்தவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றனர். சுய நினைவு இல்லாமல் கிடந்த அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து எழும்பூர் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.