தமிழே தெரியாதவர் தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியா.? நன்றாகவே மணக்கிறது“மாற்றம்”முதல்வர் விஜய்யை சாடும் எதிர்க்கட்சியினர்..


தவெக அரசின் முதல்வர் விஜய் அவர்களால் கர்நாடகாவை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலின் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக ஜெகதீஷ் சந்திரா நியமிக்கப்பட்டது மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் நெடிய வரலாறு, மொழி, இலக்கியம், பயன்பாடு, கல்வி, ஜீவாதாரப் பிரச்சனை, மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. மீனவர்களுக்கெதிரான இலங்கை அரசின் கெடுபிடிகள், நீட் விவகாரம், காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது பிரச்சனை போன்ற எதையும் அறியாத, இப்பிரச்னைகளில் அரசியல் தெளிவில்லாத, தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளை டெல்லிக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு சிறப்பு பதவிக்கு கர்நாடக்காவை சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரான ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை தமிழக அரசின் சார்பில் முதல்வர் விஜய் நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது.

கர்நாடக்காவை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட விவகாரதில் எதிர்கட்சியினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’
சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை ! முதலீட்டுப் ‘புள்ளிக்கு’தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு‘சாதி’ சிறை ! அரசாணை இல்லாமலே அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’ இருட்டில் ‘இளிக்கும்’வெளிப்படை நிர்வாகம்! நன்றாகவே மணக்கிறது“மாற்றம்” .நாசியை மூடப்போகிறோமா? நாற்றத்தை போக்கிடப்போறோமா?வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) !!என்று தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினரும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

  1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
  2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நாயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வெட்கப்படவேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?

சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?

மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு திரு. ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்! என்று கடுமையாக முதல்வர் விஜய்யை சாடியுள்ளார்.

ஏற்கனவே பல விஷயங்களில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து தனது நிலைப்பாட்டில் முதல்வர் விஜய் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்.?

-அம்பலம் செய்திக் குழு


banner

Related posts

அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்.?

Ambalam News

சொத்து குவிப்பு : பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்துகளை சி.பி.ஐ. நீதிமன்றம் பறிமுதல் செய்தது..

Ambalam News

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்சநீதி மன்றம் அதிரடி

Ambalam News

Leave a Comment