திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மொத்தம் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 2 மட்டுமே வென்றது. பவானிசாகர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் தோல்வியை தழுவியது. வால்பாறை, திருத்துறைப்பூண்டி, ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், 2026 தேர்தலில் 6 தொகுதிகள் வேண்டுமென தனது கோரிக்கையை திமுகவிடம் முன்வைத்தது.
இது குறித்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ளுமாறு திமுக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் போது தங்களுக்கு வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் விடாபிடியாக 6 தொகுதிகளில் நின்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 5 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக கூறியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொண்டது. பாஜகவை வீழ்த்துவதே எங்களது முதன்மை இலக்கு, அதற்காக ஒரு தொகுதியை விட்டுக்கொடுப்பதில் எங்களுக்குத் தயக்கமில்லை” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 10 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை திமுகவிடம் இன்று வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளி, திருத்துறைப்பூண்டி, நாகை, வால்பாறை, சிவகங்கை, பவானிசாகர், தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, திருப்பூர் வடக்கு ஆகிய 10 தொகுதிகளை கொடுத்துள்ளது.
இந்த தொகுதிகளில் 5 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இறுதி செய்யப்படும் என தெரிகிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 10 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட போகிறது என்ற அறிக்கை வெளிவரலாம் என்று கூறுகின்றனர்

