சசிகலா கடந்த பிப்ரவரி ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று புதிய கட்சி கொடியை அறிமுகப்படுத்தி தனது ஆதரவாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த தொண்டர்கள் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த தினகரன் மீது அதிருப்தியில் இருந்த அவரது ஆதரவாளர்களும் சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். அதேபோல ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்த நிலையில் அவர் மீது அதிருப்தி அடைந்து விரக்தியில் இருந்த நிர்வாகிகள் தொண்டர்களும் சசிக்கலாவை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் தான் தொடங்கிய கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரை வைத்திருப்பதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக சசிகலா அறிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா திமுக எனும் தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்றவே நான் ஒரு முடிவை எடுத்திருந்தேன். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்திருந்தார். அது போல் ஜெயலலிதாவும் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பான ஆட்சியை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுக எனும் தீயசக்தி மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டவே நான் கட்சி தொடங்குவதாக ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவித்திருந்தேன். அதில் கட்சிக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்தியிருந்தேன். எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது, தொண்டர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுக எனும் கட்சியை எடுத்து நடத்தினார். அது போல் நானும் தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். அந்த கட்சியின் பெயர் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்”. நாங்கள் வரும் தேர்தலில் தமிழகம், புதுவையில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
தமிழகத்தில் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திடீர் திடீரென ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்கிறார்கள். இந்த ஆட்சி குறித்து நான் மக்களிடம் பேசிய போது அவர்கள் திமுக மீது அதிருப்தியில் இருப்பதை உணர்ந்தேன்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். நாங்கள் என்றைக்கும் மக்களோடு இருப்போம் என்பது அவர்களுக்கும் தெரியும். மக்களுக்கு நியாய தர்மம் தெரியும், முதுகில் குத்த மாட்டார்கள். எனவே மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். எங்களுக்கு கிடைத்திருக்கும் சின்னத்தை பார்த்தீர்களா, இதில் 4 தென்னை மரங்கள் உள்ளன. இதை பார்க்கும் போது ஒற்றுமையை விரும்புவது போல் இருக்கிறது. நாங்கள் யாரையும் வேண்டாம் என ஒதுக்க மாட்டோம். அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
பொதுவாக தனி மரம் தோப்பாகாது என்பார்கள். இது தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பழமொழியாகும். இந்த பழமொழியின் படி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். எங்கள் கொள்கையுடன் ஒத்து போகும் கட்சியுடனே கூட்டணி! எங்கள் கட்சி தொடக்கத்தால் எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா.? இல்லையா.? என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரிந்து கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இவ்வாறு சசிகலா தெரிவித்திருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கமுதியில் சசிகலா ஒரு மாநாட்டை நடத்தியிருந்தார். அப்போது எடப்பாடியின் துரோகம் குறித்தும் திமுக ஆட்சியின் அவலம் குறித்தும் பட்டியலிட்ட சசிகலா, தான் ஒரு கட்சியை தொடங்கியிருப்பதாக கூறி ஒரு கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் பொரிக்கப்பட்டிருந்தன. கட்சியின் பெயரை பிறகு அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது அறிவித்துள்ளார்.
சசிகலா கட்சி தொடங்குவதாக தகவல்கள் வெளியான போது டிடிவி தினகரனோ, அப்படியெல்லாம் உடனே உடனே கட்சி தொடங்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய 6 மாதங்களாவது ஆகும். குறைந்தது 3 மாதங்களாவது ஆகும். எனவே புதிதாக கட்சி தொடங்குகிறேன் என யாராவது சொன்னால் நம்பாதீர்கள் என சசிகலாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்

