ஜனநாயகன் படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்திருந்த நிலையில் ,நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னமும் சான்றிதழ் கிடைக்காததால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக படத்திற்கு தணிக்கை சான்று வழங்காமல் இழுத்தடிப்பதாக தவெக தொண்டர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கே.வி.என் நிறுவன தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பிடி ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். வழக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக அறிவித்தார்.
பின்பு மதியம் நீதிபதி ஆஷா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தில் அதிக வன்முறை இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறி, மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை எனில், படக்குழுவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கோரிய வழக்கை (நாளை) ஜனவரி 7 இம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

