சேலம் அருகே சித்தனூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் டேக்வாண்டோ பயிற்சி பெற்று வரும் நிலையில் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பல இடங்களுக்கு சிறுமி சென்று வந்துள்ளார். கடந்த 6ம் தேதி, திருவாரூரில் நடந்த போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.
இந்த போட்டிக்கு சிறுமி உள்பட பலரை, சேலம் சிவதாபுரத்தில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி அளிக்கும் மாஸ்டர் விஜயகுமார் என்பவர் அழைத்து செல்ல இருந்த நிலையில், அவர் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக செல்லவேண்டியிருந்ததால், தனது சகோதரரான கணேசன் என்பவருடன் அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, டேக்வாண்டோ போட்டிக்கு சென்ற சித்தனூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், டேக்வாண்டோ பயிற்சியாளரின் தம்பி கணேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் எதிர்ப்பால் பயந்து போன கணேசன், தனது அண்ணன் விஜயகுமாரிடம் விஷயத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த, டேக்வாண்டோ பயிற்சியாளர் விஜயகுமார், திருவாரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லகூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, போட்டி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சூரமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணையை தொடங்கிய சூரமங்கலம் மகளிர் போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணேசன், உடந்தையாக இருந்த மாஸ்டர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விஜயகுமாரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related posts
Click to comment