எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டு – ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை.!?


எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி –
எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளால் அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வெடித்து வருகிறது. முக்கிய மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணி முடிவான பின் பல முக்கிய நிர்வாகிகள் கூட்டணி குறித்து அதிருப்தியில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவினர் தொடர்ந்து திமுவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அவரது முடிவுகள் குறித்து மூத்த அமைச்சர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்து புலம்பி வந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் செங்கோட்டையனின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில்தான், எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் புறக்கணிக்கிறார் என்று திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள், கூட்டணி இழுபறிகள், எனப் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. இச்சூழலில் தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்தபோது, இ.பி.எஸ்ஸின் இந்த முயற்சிக்கு மூத்த அமைச்சரான செங்கோட்டையன் ஆதரவு அளிக்காதது அ.தி.மு.க. வட்டாரத்தில் அப்போது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் மோதல் போக்கை தொடர்ந்து, ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இ.பி.எஸ். பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி – செங்கோட்டையன் மோதல் தற்போது உச்சத்தை அடைந்திருக்கிறது என்கின்றனர் விபரமறிந்த அதிமுகவினர்.
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறப்படுவது, அ.தி.மு.க.வில் புதிய சர்ச்சையையும் பிளவையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தனக்கான ஆதரவை திரட்டும் வேளைகளில் செங்கோட்டையன் களமிறங்கி இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கு பெறுவார்கள் என்ற பேச்சு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற சசிகலா கூறியுள்ளார். அந்த கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இது அதிமுகவை ஒரே அணியாக ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்புகிறார். மறுபுறம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தங்கள் கட்சியின் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடரும் உட்கட்சி பூசல்கள் அவருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் முத்த கட்சி நிர்வாகிகள் போன்றோரை தொடர்ந்து புறக்கணித்து தனக்கான ஆதராவாளர்கள் என்று ஒரு லிஸ்டை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இத்தனை உட்கட்சி பூசலையும் சமாளித்து தேர்தல் களத்தில் வெற்றி பெறுவாரா.? எடப்பாடி பழனிச்சாமி.


banner

Related posts

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

மனிதர்களை விடுத்து நாய்களுக்கு பாதுகாப்பு கேட்பவர்கள் தான் விலங்கு நல ஆர்வலர்களா.?

Ambalam News

நாய் குறுக்கே வந்ததால் டேங்கர் லாரியில் கார் மோதி விபத்து – 5 பேர் படுகாயம்

Ambalam News

Leave a Comment