திமுகவில் இணைந்த ஓ,பன்னீர் செல்வத்துக்கு போடி தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியது அவரது மகன் ரவீந்திரநாத் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்,திடீரென ஓ.பி.ரவீந்திரநாத் அண்ணா அறிவாலயம் வந்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
அதிமுகவில் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்துக்கொள்ள திட்டவட்டமாக எட்டப்பாடி பழனிச்சாமி மறுத்த நிலையில், கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமாகினர். இதன்பின் ஓபிஎஸ் தொகுதி வாரியாக திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஓ.பி.ரவீந்திரநாத்தும் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில் போடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ்க்கு முன் திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத்க்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளராக மகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் திடீரென அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.
திமுக சார்பாக கட்டாயம் சீட் கொடுக்கப்படும் என்று ஓ.பி.ரவீந்திரநாத் கருதி இருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு மட்டுமே சீட் அளித்த திமுக தலைமை ரவீந்திரநாத்தை தேர்தல் பணிகளை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையின் கருத்தை கேட்க அவர் அறிவாலயம் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

