திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே நேற்றைய கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுகவிடம் கடந்த முறையை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் சற்று முன் இன்று கையெழுத்தானது. கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “இந்த தேர்தலில் சிபிஐயின் முதல் குறிக்கோள், பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவது தான். அதற்கான பெரும் போரை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்தக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சிபிஐ எப்போதும் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் கட்சி.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் என்றைக்கும் உரிமைகளைக் கடந்து சென்றதில்லை. சட்டமன்றத்தில் இடம் வேண்டும் எனக் கோருவது உழைக்கும் மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும் என்பதே. அந்த அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கிறோம். திமுக உடனான 3 கட்ட பேச்சுவார்த்தையில் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளைக் கேட்டோம்.
ஆனால் பல்வேறு கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் 5 தொகுதிகளில் சிபிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. 5 தொகுதிகள் என்பது கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்யும். ஆனால் அதனை தாண்டி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற அரசியல் இதை கடந்து செல்ல வேண்டி வைக்கிறது. அதற்காக தான் நாங்கள் சேர்ந்துகொள்கிறோம். இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் 28, சிபிஐ 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் 2, மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இன்னும் தேமுதிக, மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

