சாத்தான்குளத்தில் கடந்த 19-ஜூன், 2020 அன்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கொடூரமாக தாக்கியதில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான, ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவிற்கு, ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சரிவர நடைபெற்று வருகிறது. முக்கிய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் சாட்சியம் அளித்துவிட்டனர் என்பதால், ஸ்ரீதரின் சாட்சியம் தேவையில்லை என வாதிடப்பட்டது.
இந்த மனு மீது, ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related posts
அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி | விஜய்யிடம் என்ஜினே இல்லை | நான் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன் – பாஜக அண்ணாமலை
Click to comment

