தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். அதன்படி இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அப்போது தகவல்கள் வெளியானது.
அதேபோல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலை அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நாளை (மார்ச் 15) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் மார்ச் 16 ஆம் தேதிக்குப் பிறகே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

