சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை என்பவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலியில் பதுங்கியிருந்தபோது, அவர் போலீசாரிடம் சிக்கிய நிலையில், மேலும் பல திடுக்கிட வைக்கும் பாலியல் புகார்கள் வெளியாகி உள்ளது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஞானவேல் பாபு மீது மேலும் 4 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 2024ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மொத்த தமிழகத்தையும் இந்த சம்பவம் உலுக்கிப்போட்டது. பிரபல அரசியல் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டநிலையில், ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு, பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக்கழக மாணவி ஒருவரால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில்,”அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் பாலியல் தொல்லை அளிக்கிறார். வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்” என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஞானவேல் பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதன்காரணமாக ஞானவேல் பாபு தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், திருநெல்வேலியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பேராசிரியர் ஞானவேல் கைதான நிலையில், பல மாணவிகளுக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 மாணவிகள் இன்று போலீசில் புகாரளித்துள்ளனர். அந்த மாணவிகளிடமும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேராசிரியர் ஞானவேல் பாபு இன்னும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related posts
Click to comment

