காவல்துறை லாக்கப் டெத் சம்பவங்களை தொடர்ந்து வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் வனத்துறை அலுவலகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது திமுக அரசுக்கு அடுத்த தலைவலியை கொடுத்திருக்கிறது. இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சியினர் கையிலெடுத்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன் தினம் நீதிமன்றத்தால் நிரபராதி என அறிவிக்கப்பட்ட நபரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் வனத்துறை கஸ்டடியில் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாறிமுத்துவின் மரணம் குறித்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரான மாரிமுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கஞ்சா செடி வளர்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் நேற்று முன் தினம் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். தன் விடுதலைக்குக் காரணமான, தனக்காக வாதாடிய வழக்கறிஞரை சந்தித்து நன்றி சொல்லலாம் என சென்ற மாரிமுத்து மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உடுமலைப்பேட்டை அருகே தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்துக்கு உட்பட்ட சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடந்துள்ளது. அந்த சோதனையின்போது சிறுத்தை பல் வைத்திருந்ததாக மாரிமுத்துவை கேரளா வனத் துறை பிடித்துள்ளது. பின்னர் கேரள வனத் துறையே மாரிமுத்துவை தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்துவை விசாரணைக்காக உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு வனத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சூழலில் தான் மாரிமுத்து இன்று காலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஓய்வறையில் இருந்து கழிவறைக்கு கூட்டிச் சென்றபோது உள்ளே தாழ்ப்பாழ் போட்டுக்கொண்ட மாரிமுத்து திடீரென தான் அணிந்திருந்த லுங்கியைக் கட்டி தற்கொலை செய்துகொண்டார் என வனத் துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தி வெளியில் கசிந்த நிலையில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் விரைந்தனர். வனச்சரக அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மாரிமுத்து எப்போது விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார் என்பன உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாரிமுத்துவின் உடலை அவரது மனைவி, உறவினர்கள் வந்த பின்னரே இறக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரிமுத்துவின் உறவினர்கள் வந்து பார்த்த பின்னரே அவரது உடலை இறக்கி, உடற்கூராய்வுக்கு அனுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியினர் வனச்சரக அலுவலகம் முன் குவிந்து கொடி ஏந்தி போராட்டமும் நடத்தினர்.
இந்த மர்ம மரணம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts
Click to comment