குடும்ப தகராறில் கணவன் மீது புகார் கொடுக்க சென்ற மனைவியை, காதல் வலையில் வீழ்த்தி கள்ளக்காதலியுடன் சுற்றி வந்ததோடு, கள்ளக் காதலியால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டவுடன் கள்ளக்காதலியை தந்திரமாக கொலை செய்ய திட்டமிட்டு, கைதாகி இருக்கிறார் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் 28 வயதான கோமதி இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் கோமதி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் அடிக்கடி அங்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தன்னிடம் தகராறு செய்து வரும் கணவர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த ஒரு உதவி காவல் ஆய்வாளர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குபடியும் அங்கு தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமை பாருங்கள், அவர் உதவி செய்வார் என்றும் கூறி அனுப்பியுள்ளார்.
தர்மபுரி டவுன் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கூறியபடி, கோமதி பாப்பாரப்பட்டி காவல்நிலைய தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு வாயிலாக, அடிக்கடி சந்தித்துக்கொண்ட இருவரும்காதல் வயப்பட்டு, கள்ளக்காதலர்களாக உலா வந்திருக்கின்றனர். காதல் முற்றிய நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாராம் கள்ளக்காதலியை தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி காமராஜ் நகரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். கள்ளக்காதலர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ராஜாராம் குடும்பத்தினருக்கு தெரியவந்து நிலையில் ராஜாராம் கோமதியை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்துள்ளார். இது பற்றி கோமதி ராஜாராமிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ராஜாராம், கோமதியை தொடர்பு கொண்டு நமக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் அதற்கு தீர்வு காண ஜோதிடம் பார்க்கலாம் என கூறி கோமதியின் ஜாதகத்தை சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து பெற்றுள்ளார். அதை தொடர்ந்து ஜாதகத்தில் பிரச்சினை இருப்பதால், பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோமதியிடம் கூறியுள்ளார். மேலும் பரிகாரமாக இரவு நேரத்தில், கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து சாமி பாதத்தில் ஊற்றி பரிகார பூஜை செய்தால் பிரச்னைகள் வராது என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய கோமதியை, தடங்கம் அருகே பெருமாள்கோவில் மேட்டிற்கு வரும்படி கோமதியிடம் கூறியுள்ளார். கோமதி பெருமாள்கோவில் மேட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். ராஜாராம் பரிகார பூஜை செய்ய அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வரும்படி ராஜாராம் கோமதியிடம் கூறியுள்ளார்.
கோமதி குடத்தில் கயிறு கட்டி கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்த போது, அவரை ராஜாராம் கிணற்றில் தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கிணற்றில் தள்ளப்பட்டு தத்தளித்த கோமதி கூச்சலிட்டுள்ளார்.
கோமதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை கிணற்றில் இருந்து மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் கோமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கோமதி கூறியுள்ளார்.
தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் கிணற்றுக்குள் தள்ளி தன்னை கொலை செய்ய முயன்றதாக கோமதி கொடுத்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related posts
Click to comment