மே 17 இயக்கத்தினர் சார்பாக ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் சிவா திலீபன் என்பவர் ரயில் முன் பாய்ந்தார். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மே 17 இயக்கத்தினர் சார்பாக ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடந்து வருகிறது. மொழிப்போர் தியாகி தாளமுத்து நினைவு நாளில் இந்த போராட்டம் துவங்கிய நிலையில், சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்து திருமுருகன் காந்தி தலைமையில் போராடினார்கள்.
17 இயக்கத்தினர் நடத்திய இந்த போராட்டத்தில் சிவா திலீபன் என்பவர் உணர்ச்சி பெருக்கில் தமிழ் வாழ்க என கோஷமிட்டவாறு திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்நிலையில் சிவா திலீபனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனது வலைதளபதிவில், தாய்த்தமிழை காப்பதற்காக எந்த விதமான தியாகமும் செய்ய தயாராக இருக்கும் இளைஞர்களே. உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும். உயிரை அல்ல. மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிராக நடந்த இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சகோதரர் சிவா திலீபன்.
அவரையும், உடனிருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகனையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதோடு மொழிப்போரின் போது பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘பிள்ளைகளை பலி கொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்’ என்று கூறியதும் என்னுள் ஒருசேர எழுந்தது.
இருந்து போராட வேண்டும். அதனுடைய பயனை இருந்து காண வேண்டும். அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் இருந்து தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை ஒற்றுமையாக இருந்து முறியடிப்போம். நம் அறிவாற்றலை உணர்ச்சிகள் ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம். எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், இதுபோன்ற செயல்களை உணர்ச்சிவயப்பட்டு யாரும் செய்யக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்று திரும்ப வேண்டும். அதற்கான அனைத்து சிறப்பு கவனிப்புகளையும் செய்வதற்கு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மருத்துவர்களை சந்தித்தது மற்றும் சிவா திலீபன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படங்களையும் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

