2020 ஜூன் 19 அன்று, தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமீறல் குற்றச்சாட்டில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட இவர்கள், பின்னர் மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பால்துரை ஏற்கெனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார்.
மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், கடந்த மார்ச் 23 அன்று இந்த 9 காவலர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று காலை 10:30 மணிக்குத் தண்டனை குறித்த விசாரணை தொடங்கி, பிற்பகல் 3:30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 5.30 மணிக்கு தண்டனை விவரங்கள் வெளியானது.
2427 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வாசித்த நீதிபதி, இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனை கொடுப்பதா.? என ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. ஆயுள் தண்டனையால் காவல் துறைக்கு அச்சம் ஏற்படாது. தந்தை, மகன் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது என்றார்.
9 போலீஸாருக்கும் மரண தண்டனை விதித்து முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார். முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தூக்கு தண்டனையுடன் ரூ 15 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளார். அது போல் மற்ற 8 பேருக்கும் தனித்தனியே அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தந்தை, மகன் ஆகியோரை அடித்தே கொன்றதால் இந்த வழக்கில் தனித்தனியே 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

