மதுரை மாநகரில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மேயர் இந்திராணியை பொம்மை மேயராக அமரவைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தில் ‘நிழல் மேயராக’ செயல்பட்டு, முடிவுகளை எடுத்ததாக எதிர்க்கட்சிகளும், திமுகவினரும் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக கடந்த மே மாதம் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த நீக்கத்தைத் தொடர்ந்து, மாநகராட்சியில் மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழலின் பின்னணியில் மேயரின் கணவர் மற்றும் மண்டல தலைவர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, மற்றும் இந்த மண்டலங்களின் தலைவர்களாக வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இந்த ராஜினாமா உத்தரவை அடுத்து மண்டல தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடனான ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில், தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவிகளைப் பறிப்பேன் என்று எச்சரித்திருந்தார். எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பத்திருப்பது பல திமுக பொருப்பாளர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது
மேலும், இந்த விவகாரத்தில், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.